வடகாடு,
புதுக்கோட்டையில் 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஹைட்ரோ கார்பன் என்பது மீத்தேன் வாயுக்களின் பொதுப்பெயர். இந்த பெயரில் தான் தற்போது, பாஜக அரசு இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பதல் அளித்ததை கண்டித்து நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் உள்பட நாட்டின் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் (மீத்தேன்) எடுப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கண்டித்தும் நெடுவாசலில் நேற்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் விவசாயிகள் கூறுகையில், “ஓஎன்ஜிசி நிறுவனம் எங்கள் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீத்தேன் எடுப்பதற்காக நிலம் கையகப்படுத்த முயற்சிகள் செய்தனர்.
நிலத்தை கருவறுக்கும் இந்த செயலைக் கண்டித்து விவசாயிகளும், மக்களும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து எரிவாயு சோதனை பணிகளை அந்த நிறுவனம் நிறுத்தி வைத்தது.
கடந்த ஆண்டு நெடுவாசல் கிராமத்தில் மேலும் சில இடங்களில் நிலங்களை கையகப்படுத்த அந்த நிறுவனம் முயற்சி செய்தது. அதற்கும் விவசாயிகள் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில் இப்பகுதி மக்களிடம் கருத்து கேட்காமல் தற்போது, மீண்டும் அதே மீத்தேன் திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் அனுமதித்துள்ளது மத்திய அரசு. தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராகவும், ஏமாற்றும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். விவசாயத்தையே அடிப்படையாக கொண்டுள்ள எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
இதனால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் ஒன்றுகூடி இப்பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று இத்திட்டத்தைிரத்து செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம்” என்றுத் தெரிவித்தனர்.
மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தற்போது, ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் மலடாவது உறுதி.
அனைத்து இயற்கையை வளங்களையும் ஒருங்கே பெற்று தனித்து நிற்கிறது தமிழகம். அதன் வளங்களை தண்ணீர் தராமல் கெடுப்பது, அணைக்கட்டி வளங்களை வளர விடாமல் செய்வது, மீத்தேன், கெயில் எடுக்கிறேன் பேர்வழி என்று தமிழகத்தை வஞ்சிப்பது போன்ற மக்கள் விரோத போக்கை எப்போதும் முன் எடுக்கிறது பாஜக அரசு.
தமிழகத்தில் தான் நினைக்கும் ஏதும் நடக்கவில்லை என்பதால், இந்த மாதிரியான விரோதப் போக்கை கடைப்பிடிக்கிறதா பாஜக அரசு என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
