அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை பாஜகவின் துணை அமைப்புகள் என கரூர் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்
மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனால், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செந்தில் பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளனர். செந்தில் பாலாஜியின் இதயத்துக்கு செல்லும் முக்கிய 3 ரத்தகுழாய்களில் அடைப்பு இருப்பதாகவும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, அவருக்கு விரைவாக அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
செந்தில் பாலாஜியின் கைதுக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமலாக்கத் துறையின் நடவடிக்கை மனித உரிமை மீறல் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு மனிதநேயமற்ற முறையில் பாஜக வின் அமலாக்கத்துறை அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.’ என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அல்ல என பாஜக விளக்கம் அளித்துள்ளது. புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு அதிமுகவினர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜி ரெய்டில் அரசியல் காழ்புணர்ச்சி இல்லை - மத்திய அமைச்சர் எல்.முருகன்!
இந்த நிலையில், அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை பாஜகவின் துணை அமைப்புகள் என கரூர் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டு, நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டிருப்பதும், அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசின் இதயமான தலைமை செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய வேண்டிய,பலமணி நேரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைத்த அமைச்சரை நள்ளிரவில் கைதுசெய்ய வேண்டிய அவசரம் ஏன்?
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் தொடர்ச்சியாகவே இதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை பாஜகவின் துணை அமைப்புகளாக செயல்படுகின்றன என்பதை இந்த அத்துமீறல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதையும், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
