Kanimozhi : என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்- கனிமொழி திடீர் அறிக்கை
எனது பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் என்னைச் சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிடும் படி கேட்டுக்கொள்வதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
![Kanimozhi has requested that no one come to meet me on my birthday KAK Kanimozhi has requested that no one come to meet me on my birthday KAK](https://static-ai.asianetnews.com/images/01fpf7sjdbe95w2qz5q8cajag9/kanimozhi_363x203xt.jpg)
வட மற்றும் தென் தமிழகத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளமானது பொதுமக்களை புரட்டி போட்டது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் திமுக எம்பி கனிமொழியின் பிறந்தநாள்(ஜன5) நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற மாதம் தொடர் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சென்னையில் வெள்ளம் வடிவதற்குள் மற்றுமொரு பேரிடராக, தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர்.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதி அதிக பாதிப்புக்குள்ளானது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டங்களாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்து இயல்புநிலை திரும்பிட களத்தில் எல்லோரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இச்சூழலில் எனது பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் என்னைச் சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்வதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.