கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அண்மையில் ஹவுஸ் ஆஃப் கத்தர் என்ற தனது ஃபேஷன் பிராண்டை தொடங்க அமெரிக்கா சென்றிருந்தார். சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு சளி, இருமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Scroll to load tweet…

இதுக்குறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார். அவரது பதிவில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்திருந்தார். இவரது பதிவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து கமல்ஹாசன் நலம் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர், திரைபிரபலங்கள் என பலரும் அவர் குணமடைந்து வர வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்காலிகமாக தொகுத்து அளித்து வந்தார். இதற்கிடையே கமல்ஹாசனின் உடல் நிலை சீராக இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதை உறுதி செய்யும் வகையில் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக அவருடைய மகள் ஸ்ருதி ஹாசனும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், என் தந்தையின் ஆரோக்கியத்திற்காக வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறார். என்று பதிவிட்டிருந்தார்.

இதனிடையே கமல்ஹாசன் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவும் அந்த தகவலில் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

Scroll to load tweet…

அதில், “தலைவர் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ஆனால், நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவைச் சிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ராமச்சந்திரா மருத்துவமனை கமல்ஹாசன் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லேசான கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்துவிட்டார். டிசம்பர் 3 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வில் இருப்பார்; டிசம்பர் 4 ஆம் தேதி முதல் வழக்கமான பணிகளில் கமல்ஹாசன் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.