மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினால் கமல்ஹாசன் த்ஹான் அடுத்த முதல்வர் – நடிகர் பிரசன்னா கருத்து…
சேலம்
மக்களின் எதிர்பார்ப்பை கமல்ஹாசன் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். என்னைபோல் ஒட்டுமொத்த மக்களும் நம்பினால் அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று சேலத்தில் நடிகர் பிரசன்னா கருத்து தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில், நடிகர் பிரச்சனா மற்றும் இயக்குநர் மிஷ்கின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அதில், “தமிழகத்தில் திருட்டு வி.சி.டி.க்களை ஒழிக்க திரைத்துறையினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
“திருட்டு வி.சி.டி. இல்லை” என்ற நிலை தமிழகத்தில் விரைவில் வரும் என்று நம்புகிறோம். திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவினர் தீவிரமாகச் செயல்பட்டால்தான் இதை இல்லாமல் ஆக்க முடியும்.
திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறைப்பது தொடர்பாக அரசு தான் முடிவு எடுக்க முடியும். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை பார்த்து மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்தச் சூழ்நிலையை யாராவது மாற்ற வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பை கமல்ஹாசன் நிறைவேற்றுவார் என்று நான் நம்புகிறேன்.
என்னைபோல் ஒட்டுமொத்த மக்களும் நம்பினால் அவர் முதலமைச்சராக முடியும். கருத்து கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு” என்று நடிகர் பிரசன்னா தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் மிஷ்கின், “துப்பறிவாளன் திரைப்படம் 2-வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். வியாபார நோக்கத்துடன் மட்டுமல்லாமல் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. துப்பறிவாளன் படத்தை 4-ஆம் பாகம் வரை இயக்கவுள்ளேன்.
நான் அரசியலுக்கு வரமாட்டேன். அவரவர் வேலைகளை, அவரவர்கள் ஒழுங்காக செய்தாலே போதும்” என்று தெரிவித்தார்.