பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவரது உடலை மறு உடல் கூராய்வு செய்ய நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் உடல் கூராய்வின் போது மாணவி தந்தை அவரது வழக்கறிஞருடன் உடனிருக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது யார் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்து விட்டு, போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்று மாணவியின் தந்தைக்கு நீதிபதி கேள்வியெழுப்பினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் பள்ளிக்குள் சென்று வன்முறையாளர்கள் மாணவர்களின் டிசியை எரிக்க உரிமை அளித்தது யார் எனவும் நீதிபதி கேள்வியெழுப்பினார். மேலும் கள்ளக்குறிச்சி வன்முறை திடீர் கோபத்தினால் நிகழ்ந்தது இல்லை என்று அது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையாக தெரிகிறது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கலவரத்திற்கு யார் காரணம் என்பதை புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும் படிக்க:உயிரிழந்த மகனை கட்டித்தழுவி அழுது.. அதே இடத்தில் மாரடைப்பால் துடிதுடித்து இறந்த தாய்.. செங்கல்பட்டில் சோகம்.!

காவல்துறையினர் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆனால் சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என்று நீதிபதி சதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக உளவுத்துறை அறிக்கை என்ன சொல்கிறது என்றும் சிலர் மட்டுமே இந்த வன்முறைக்கு காரணமில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். டிராக்டரால் பேருந்தை மோதியது தான் மொத்த வன்முறைக்கும் காரணம் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மாணவியின் பெற்றோர் மீது இரக்கம் கொள்கிறேன். ஆனால் மற்றவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடாது என்று நீதிபதி கூறினார். இதனிடையே பெற்றோருக்கும் வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மனுதாரர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் மாணவியின் மர்ம மரணம் குறித்தான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் யாரையும் பாதுகாக்கும் நோக்கம் இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

மேலும் படிக்க:Explainer:கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி இறந்த விவகாரம்! குற்றவாளிகள் யார்? முழு தகவல்!

அமைதியாக நடைபெற்ற போராட்டம் திடீரென்று வன்முறையாக வெடித்ததாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று நீதிபதி கேள்வியெழுப்பினார். கள்ளிக்குறிச்சியில் வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்களை கண்டறிய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டார். வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுவிட்டால் காவல்துறை வேலை முடிந்ததாக நினைக்க வேண்டாம்; கலவரத்திற்கு யார் காரணம் என்பதை புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

மேலும் உயிரிழந்த மாணவியின் உடல் தகுதியில்லாத மருத்துவர்களால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. எனவே மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போத்ஜு நீதிபதி, தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம் என்றும் நீங்கள் நிபுணரா என்றும் கேள்வியெழுப்பினார். தொடர்ந்து மாணவியின் உடலை மறு உடல் கூராய்வு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார். மாணவியின் தந்தை தனது வழக்கறிஞருடன் உடல் மறுகூராய்வின் போது உடன் இருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது.. டிசியை எரித்தது ஏன்..? சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிபதி

மறு உடல் கூராய்வு முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உடல் கூராய்வுக்கு பிறகு மாணவியின் உடலை எதிர்ப்பின்றி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாணவியின் தந்தைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.