கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு கேட்டு உள்துறை செயலாளர் அமுதாவிற்கு கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து சில செய்திகள் பரவிய நிலையில் அதனை காவல்துறை மறுத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு கேட்டு உள்துறை செயலாளர் அமுதாவிற்கு கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று திமுக எம்எல்ஏக்கள் உட்பட ஆளும் கட்சியினர் தரும் அழுத்தம் காரணமாக அவரால் அங்கு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு கேட்டு உள்துறை செயலாளர் அமுதாவிற்கு கடிதம் எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதனை காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அவர்கள் கடந்த ஜனவரி-2023 முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்று இதுநாள் வரை தனது பணியில் சிறப்பாக செயல்பட்டு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றி வருகிறார். கடந்த 1987-ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாநகரம் மற்றும் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் லஞ்சஒழிப்புதுறையில் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். 

மேலும் காவல்துறையில் சுமார் 36 வருடங்களாக செம்மையாக பணியாற்றி,வருகின்ற 31.05.2024 அன்றுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் பணியின்பால் முழு திருப்தி அடைந்த காரணத்தினாலும், உடல் நிலையை கருத்தில் கொண்டும் தனது சொந்த சூழ்நிலையின் காரணமாக விருப்ப ஓய்வு கோரி உள்ளார். இதுசம்மந்தமாக, பல்வேறு சமூக ஊடகங்கள் மற்றும் செய்திதாள்களில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வருகின்றனர். இச்செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.