'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி திடீர் கைது...
கக்கூஸ் ஆவணப்பட இயக்குநரும், சமூக செயற்பாட்டாளருமான திவ்யபாரதி மதுரையில் இன்று கைது செய்யப்பட்டார்.
சமூக செயற்பாட்டாளரான திவ்யபாரதி, மாணவியாக இருந்தபோது, சக மாணவன் உயிரிழந்ததை அடுத்து அவரின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். பாம்புகள் நடமாடுவதால் மாணவர் விடுதியை சீரமைக்கக்கோரியும் அவர் போராட்டம் நடத்தினார்.
2009 ஆம் ஆண்டு நடந்த போரட்டத்தின்போது திவ்யபாரதி, மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினார். பின்னர், சாலை மறியலிலும் அவர் ஈடுபட்டார். இது தொடர்பாக திவ்யபாரதி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் இன்று மதுரை சென்ற திவ்ய பாரதியை, போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்ட 2-வது குற்றவியல் நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இவரின் நண்பர் நிஜாமும் கைது செய்யப்பட்டார்.
திவ்யபாரதி கைது செய்யப்பட்டது குறித்து போலீசார் விளக்கமளிக்க மறுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட திவ்யபாரதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சமூக செயற்பாட்டாளரான திவ்யபாரதி, கக்கூஸ் என்ற ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார். தீண்டாமை, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைக்கு எதிராக திவ்யபாரதி தொடர்ந்து போராடி வருகிறார்.
கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சனையில் திவ்யபாரதி, துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வதாகவும், சமூக வலைத்தளங்களில் மக்களை தூண்டும் விதமாக இவரின் நடவடிக்கை உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர் திவ்யபாரதி செய்தியாளர்களிடம் பேசும்போது, 2009 ஆம் ஆண்டு தலித் மாணவர் பாம்பு கடித்து இறந்து விட்டார். அவரின் இழப்புக்கு உரிய இழப்பீடு வேண்டும் என்று போராடினோம். அது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டதாக கூறினார். சமூக செயல்பாடுகளில் உள்ளவர்களை முடக்குவதற்காக போடப்பட்ட வழக்கு என்று திவ்யபாரதி கூறினார்.
திவ்யபாரதி மற்றும் அவரின் நண்பர் நிஜாம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஆகஸ்ட் 8 ஆம் தேதி காவலில் வைக்க மதுரை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், சமூக செயற்பாட்டாளர் திவ்யபாரதிக்கு மதுரை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. திவ்யபாரதி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வாரத்தில் கையெழுத்திடவும் திவ்யபாரதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.