500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது – விடிய விடிய நகைக்கடைகளில் வியாபாரம்
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அரசு அறிவித்ததால், விடிய விடிய நகைக்கடைகளில் வியாபாரம் களைக்கட்டியது.
பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி பயன்படாது என நேற்று இரவு அறிவித்தார். இதை கேட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியைடைந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சிலர் தங்களிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை உடனடியாக மாற்ற கடைகளுக்கு படை எடுத்தனர்.
ஆனால், குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் சில்லறை இருந்ததால், கடைகளில் மாற்ற முடிந்தது. சிலர் பெட்ரோல் பங்க்குகளிலும், குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளிலும் மாற்றி கொண்டனர். ஆனால், போதிய அளவுக்கு அந்த பணத்தை மாற்ற முடியவில்லை. நேரமும் போதவில்லை.
இந்நிலையில், அதிகளவு பணம் வைத்து இருந்த பெருங்குடி மக்கள், நள்ளிரவிலும் நகைக்கடைக்கு சென்று, தங்களுக்கு வேண்டிய டிசைன்களில் நகைகளை வாங்கி கொண்டனர். இதனால் தி.நகர், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்பட பல பகுதிகளில் விடிய விடிய நகைக்கடைகளில் வியாபாரம் களைகட்டியது.
பொதுவாக தீபாவளி, பொங்கல், அக்ஷய திருதியை உள்பட விசேஷ நாட்களில் மட்டும் நகைக்கடைகளில் கூட்டம் திரளும். ஆனால் அரசு, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததும், கையில் உள்ள பணத்தை சில்லறையாக மாற்ற முடியததால், ஏராளமான மக்கள் நகைக்கடையில் திரண்டனர். இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.