என் பெயரை பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி.! ஜெ. உதவியாளர் பூங்குன்றன் வேதனை
நானே வேலை கேட்டு சுத்தி கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ள ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், இன்று நான் வேலை வாங்கித் தரும் நிலையில் இல்லையென வேதனையோடு கூறியுள்ளார்.
வேதனையில் பூங்குன்றன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றனர், ஜெயலலிதாவின் மறைவிற்கு முன்னர் பூங்குன்றனின் நட்பு கிடைக்காதா என ஏங்கியவர்கள் பலர், ஆனால் இன்றோ, அவரோ வறுமையில் வாடுகிறார்.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அமைதியான பூங்குன்றன் அரசியலிலிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொண்டார்.
பூங்குன்றனை தெரியாத நிர்வாகிகளே அதிமுகவில் கிடையாது. அந்த அளவிற்கு போயஸ் கார்டனுக்குள் வருவதாக இருந்தால் பூங்குன்றனை தாண்டி செல்ல முடியாது. இந்த நிலையில் தனது பெயரை தவறாக பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக மோசடி நடைபெறுவதாக வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடன் பலர் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.
நானே வேலை கேட்டு சுத்தி கொண்டிருக்கிறேன்
அவர்களில் எதையும் எதிர்பார்க்காத நல்லவர்களும் இருக்கிறார்கள். எனது பெயரை பயன்படுத்தி கொள்ளும் வல்லவர்களும் இருக்கிறார்கள். இன்று ஒருவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போதுதான், இப்போதும் எனது பெயரை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். நான் சொன்னேன், "நானே வேலை கேட்டு சுத்தி கொண்டிருக்கிறேன். இன்று நான் வேலை வாங்கித் தரும் நிலையில் இல்லை என்றேன் சிரித்துக் கொண்டே!" வேலைக்கு அந்த நபர் முன்பணம் வேறு வாங்கிவிட்டாராம். கொடுத்தவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராம். பணத்தை கஷ்டப்பட்டு தயார் செய்து கொடுத்திருக்கிறாராம்.
என்னை வசைபாடிக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை
ஐயோ பாவம்! நீங்கள் செய்யும் பாவத்தில் என்னையும் பங்கெடுக்க வைக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்..! என் பெயரை யார் பயன்படுத்தினாலும் யாரும் ஏமாறாதீர்கள். என்னோடு நெருங்கி பழகுகிறார்கள் என்று யாரும் தப்பு கணக்கு போடாதீர்கள். என்னுடன் பழகாமலேயே பலர் அன்று ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். இன்றும் எனது பெயரை நம்பி நீங்கள் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது எனக்கு பெரும் கவலையே..! நீங்கள் பணத்தை கொடுத்துவிட்டு, பெற்றுக்கொண்டவர் சொல்லும் கதையை கேட்டு என்னை வசைபாடிக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என பூங்குன்றனர் பதிவு செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்