தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. போராட்ட மாணவர்களுடன், அரசு சார்பில் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சட்டம் இயற்றினால் மட்டுமே, போராட்டம் கைவிடப்படும் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

கடந்த 16 ஆம் தேதி அலங்காநல்லுரில் தொடங்கிய இப்போராட்டம் இன்று இந்தியா மட்டுமல்ல உலகில் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போராட்டம் வீறு கொண்டு பரவி வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, துத்துக்குடி,ஈரோடு என அனைத்துப் பகுதிகளிலும் உணர்ச்சிப் பெருக்குடன் நடைபெற்று வருகிறது.

அறவழியில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தைப் பார்த்து உலகமே வியந்து வருகிறது. சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பல ஆண்டு காலமாக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத எந்த அரசியல்வாதிகளையும் போராட்டக்காரர்கள் பக்கத்திலேயே அனுமதிக்கவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கில் கூடியிருந்தாலும் அவர்களுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க எந்த வசதியும் செய்த தரவில்லை. ஆனாலும் அவர்கள் அத்தனை சிரமத்திலும் கட்டுக்குலையாமல், உறுதியுடன் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் பற்ற வைக்கப்பட்ட இந்த போராட்டத் தீ உலகம் முழுவதும் பரவி வருகிறது.

சமூக ஊடகங்கள் மூலம் தமிழக இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு அளிக்கும்படி உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களை கேட்டுக் கொண்டதால் இந்த போராட்டம் தற்போது மற்ற நாடுகளுக்கும்பரவி உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ரஷியா, சீனா, கனடா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில்வசிக்கும் தமிழர்கள் மற்றும் தமிழ் சங்கங்கள் அங்குள்ள மக்களிடம் ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.

BBC, CNN போன்ற ஆங்கில ஊடகங்களும் தங்களின் பார்வையை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மீது திருப்பியுள்ளன.

’48’ மணி நேரத்தைக் கடந்தும் ஜல்லிக்கட்டு புரட்சி தொய்வின்றி தொடர்ந்து வருவதால், வரலாறு காணாத இந்த போராட்டம் தமிழகத்தை நோக்கி உலகமே திருப்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளது.