தமிழகம் முழுவதும் நேற்று உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அந்த இடத்துக்கு சென்ற போலீசார், போட்டியை தடுத்து நிறுத்தினர். பலரை கைது செய்தனர்.

இதையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காகவும், கலந்து கொள்வதற்காகவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களும், வாலிபர்களும் திரண்டனர். ஆனால், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்துவதாக அறிவித்து, காளைகளை கழற்றிவிட்டனர். அப்போது, காளை மாடுகள் தறிக்கெட்டு ஓடின. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், தடியடி நடத்தி, அங்கிருந்தவர்களை கலைய செய்தனர். இதனால், போலீசாரை கண்டித்து அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தினர்.

நிலைமை கட்டுக்கு அடங்காமல் போனதால், போலீசார் சிலரை கைது செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனை கண்டித்து நேற்று இரவு முதல் தற்போது வரை பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தியும் எவ்வித பலனும் இல்லை.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் அழகுமலை பகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டதுடன், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மைதானமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு தர்மபுரி உள்பட அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து காளை மாடுகள், களத்தில் இறக்க கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கவும், அதில் பங்கேற்கவும் ஏராளமான வாலிபர்களும் அங்கு திரண்டவண்ணம் உள்ளனர். இதனால், திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.