உச்சநீதிமன்ற தடை உத்தரவை மீறி, செங்குன்றம் அருகே இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதையறிந்து போலீசார் அங்கு சென்றனர். அதற்குள் போட்டி முடிந்துவிட்டதால், ஏமாற்றம் அடைந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு பகுதிகளில் உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. தற்போது, மதுரை அலங்காநல்லூரில், காளைகளை அவிழ்த்துவிட முயன்றதால், அங்கிருந்த வாலிபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே புதிய எருமை வெட்டிப்பாளையம் மற்றும் பழைய எருமை வெட்டிப்பாளையம் ஆகிய ஊராட்சி சார்பில், இன்று காலை 6 மணிக்கு, அதே பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஏழுமலை தலைமையில், நடந்த இப்போட்டி, சுமார் 7.30 மணிவரை நடந்தது. இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது பற்றி தகவல் அறிந்ததும், சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது. இதனால், போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி நாம் தமிழர் கட்சியினர் வழக்கறிஞர் ஏழுமலை உள்பட 22 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், “இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும் என நாங்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம். ஆனால், அதை பற்றி வெளியில் சொல்லவில்லை. போட்டி தொடங்கும்போது, அனைத்து பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தோம். அதன்பேரில் சென்னை, திருவள்ளூர், ஆவடி உள்பட பல பகுதிகளில் இருந்து வந்தனர். அதை பார்த்தபிறகு, போலீசாருக்கு தெரிந்தது. அதன்பின்னர் போட்டியை தடுத்து நிறுத்த வந்தனர். அதற்குள் நாங்கள் முடித்துவிட்டோம்” என்றனர்.