தமிழகத்தில் 100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை... உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை விளக்கம்!!
தமிழகத்தில் 100 சதவீதம் தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் 100 சதவீதம் தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக 1107 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டது. இதனிடையே பேருந்துகள் கொள்முதல் செய்யும் போது, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்... அறிவித்தது மாவட்ட நிர்வாகம்!!
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நூறு சதவீதம் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து விளக்கம் கேட்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக சாலை போக்குவரத்து நிறுவன இயக்குனர் தாக்கல் செய்த கூடுதல் பதில் மனுவில், 100 சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டுமானால் அதற்குரிய வகையில் பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்; பாஜக செயற்குழு கூட்டத்தில் போடப்பட்ட 9 தீர்மானங்கள் - அண்ணாமலை அதிரடி!
மழை காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் பேருந்துக்குள் புகுந்து விடும். ஒரு தாழ்தள பேருந்தின் விலை 80 லட்சம் ரூபாய். அதனை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்க 41 ரூபாய் செலவாகும். சாதாரண பேருந்துகளுக்கு பாதி செலவே ஆகின்றன. தாழ்தள பேருந்துகள் பராமரிப்புக்கு தனி வசதிகள் தேவைப்படும். இந்த காரணங்களால், 100சதவீதம் தாழ்தள பேருந்துகளை இயக்கவது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து மாற்று வழிகள் குறித்து பொறியாளர்காளிடம் கலந்து பேசி தெரிவிக்கும்படி அரசு தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன.24க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.