Is the Supreme Court refusing the freedom of media freedom? - Thirumavalavan question

ஊடக சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கர்ணன். இவர் கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக புகார் கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம், தானாகவே நீதிபதி கர்ணன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது, மே 5ஆம் தேதி நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு மனநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என டெல்லி டிஜிபிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் பதிலுக்கு உத்தரவிட்டார்.

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நீதிபதிகள் ஆஜராகவில்லை என்பதால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜகதீஸ் சிங் கெஹர், தீபக் மிஸ்ரா, ஜலமேஷ்வர், ரஞ்சன் கோகை, மதன் பி.லோகூர், பினாகி சந்திரகோஷ், குரியன் ஜோசப் உள்ளிட்ட 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனால் அதிர்ச்சியுற்ற உச்சநீதிமன்றம் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதனிடையே நீதிபதி கர்ணன் வெளியிடும் செய்திகளை ஊடங்கங்கள் வெளியிட கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஊடக சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா?

நீதித்துறையின் மாண்பை கருதி நீதிபதி கர்ணன் மீதான ஆணையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை பதவி நீக்கம் செய்யலாம் என்பது தவறு.

உயர்நீதிமன்ற நீதிபதிகளை கட்டுபடுத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.