'தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை' என்று ஒடிசா ரயில் விபத்து குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் , ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரயில்களும் ஒன்றோடொன்று மோதி விபத்தில் சிக்கின. இந்த பயங்கர விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவர்களில் 88 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பலரது உடல்கள் ரயில் பெட்டிகளுக்கு அடியில் சிக்கி சிதைந்து போயுள்ளதால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விபத்தில் இருந்து உயிர்பிழைத்தவர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோரமண்டல் ரயில் விபத்து மீட்புப்பணிகளுக்காக ஒடிசா சென்ற அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் சென்னை திரும்பிய நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''என்னையும் அமைச்சர் சிவசங்கர் அவர்களையும் கிளம்பிபோக சொன்னார்கள்.

நாங்கள் நேரடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றோம். பின்னர் மருத்துவமனைக்கும் சென்றிருந்தோம். அங்குதான் காயம்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு கூட்டிச் சென்றார்கள். அங்கு விசாரித்தோம் அங்கு தமிழர்கள் இல்லை. அங்கிருந்த அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம்.

அவர்களின் கணக்குப்படியும் தமிழர்கள் அங்கு பாதிக்கப்படவில்லை என தெரியவந்தது. அதன் பிறகு தமிழக முதல்வரிடம் சூம் காலில் பேசும் பொழுது 28 பேர் மட்டும் டிராவல் செய்து உள்ளார்கள் என தகவல் கிடைத்தது. ஒடிசா அரசு கால் சென்டர் மாதிரி ஒன்றை உருவாக்கி உள்ளார்கள். எட்டு பேரை மட்டும் ரீச் பண்ண முடியாமல் இருந்தது.

இதையும் படிங்க..ஒடிசா ரயில் சோகத்திற்கு ‘முக்கிய’ காரணம் இதுதான்.! ரயில்வே ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | முழு பின்னணி

சமீபத்தில் எங்களுக்கு கிடைத்த கணக்குப்படி அங்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் தெரிவித்ததில் இரண்டு பேரை ட்ரேஸ் பண்ணிவிட்டோம். அருண், கல்பனா, கமல், மீனா, ரகுநாதன், கார்த்திக் ஆகிய ஆறுபேரின் நிலை குறித்து அறிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. நம்முடைய அரசு அதிகாரிகள் அங்கு தான் தங்கி இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நல்ல செய்திகள் வரும் என நம்புகிறோம்.

நம்முடைய அரசு அதிகாரிகள் அங்குதான் தங்கி உள்ளார்கள். இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். ரொம்ப பாவமாக இருந்தது. ஒன்றிய அரசு தவறு எதனால் நடந்தது என்பதை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க..பெருமாள் கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதா? அன்று தஞ்சாவூர்! இன்று சென்னையா? கொதிக்கும் ஆர்வலர்கள்