Inqulab family denied sahithya acadamy award
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள மறைந்த எழுத்தாளர் இன்குலாப்பின் குடும்பத்தினர் அந்த விருதை ஏற்க மறுத்துள்ளனர். உயிருடன் இருந்தபோதே அவர் விருதகளை ஏற்க மறுத்தவர் என்பதை சுட்டிக்காட்டிய அவரது மகள் ஆமினா பர்வீன், விருதக்காக இன்குலாப் எழுதவில்லை என்று கூறினார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாகித்ய அகாடமி அமைப்பு ஆண்டுதோறும் 24 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படைப்புக்கான விருது மறைந்த கவிஞர் இன்குலாப் எழுதிய ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதை நூல் படைப்புக்கு வழங்கப்படுகிறது.
கவிஞர் இன்குலாப் சமூக அக்கறை தோய்ந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட கவிதைகளை படைத்தவர். இவரது படைப்புகள் இலக்கிய உலகத்தால் மட்டுமல்ல, போராட்டக்காரர்களுக்கும், தொழிற்சங்கத் தோழர்களுக்கும் உரம் சேர்க்கும் படைப்புகளாக விளங்குகின்றன.
இவருடைய ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ எனும் கவிதை பல மேடைகளில் பாடப்படுகிறது. இன்குலாப் எழுதிய ‘அவ்வை’ நாடகம் பெண்ணியம் பேசும் நாடக மேடைகளில் முக்கியத்துவம் பெறும் படைப்பாக விளங்குகிறது.

இன்குலாப் எழுதி தஞ்சாவூர் அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘காந்தள் நாட்கள்’ நூல் 2016-ல் வெளிவந்தது. அந்த நூலுக்கு 2017 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மொழிபெயர்ப்பு நூல் பிரிவுக்கான விருது மலையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதி 69 பதிப்புக்கள் கண்டு லட்சக்கணக்கில் விற்பனையான கசாக்கின் ‘இதிகாசம்’ என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ள கவிஞர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசினால் அளிக்கப்படும் சாகித்ய அகாடமி ஓர் அங்கீகாரமாகலாம். இன்குலாப் அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும் காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார். இன்குலாப் விருப்பப்படி இவ்விருதை நாங்கள் ஏற்கவில்லை என அவரது குடும்பத்தினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சாகித்ய அகாடமியின் இந்த விருதில் ரூ.1 லட்சம் ரொக்கம், தாமிர பட்டயம், சால்வை ஆகியவை அளித்து சிறப்பிக்கப்படுவார்கள். மொழி பெயர்ப்புக்கான விருது தொகை ரூ.50 ஆயிரம். இந்த விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி நடைபெறுகிறது.
