நாமக்கல் நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் வருமான வரித் துறையினர் அதிரடியாக நடத்திய சோதனை நான்கு மணி நேரத்திற்கு மேலும் நீடித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் எனவும், பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்து இருந்தார்.

அதன்படி, பழைய நோட்டுகளை மாற்றி புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பல்வேறு விதிகளுக்கு உட்படுத்தப்பட்டு பெற்றுக் கொண்டனர் எளிய மக்கள். வங்கியில் வரிசையில் நின்று 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். முதலாளிகளுக்கு மட்டும் சேவை செய்யும் அரசாக மோடி அரசு இருந்து வருகிறது.

இந்த நிலையில், சிபிஐ மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி வருகின்றனர்.

எளிய மக்கள் 2000 ரூபாய் பணத்தை பெற மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆனால், பல்வேறு இடங்களில் கோடி கணக்கில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பிடிபடுகிறது. அதிலும், பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களும் இதில் அடக்கம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நாமக்கல் நகரில் கடை வீதியில் உள்ள பிரபல நகைக் கடைக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர் வந்தனர்.

ஐந்து பேர் கொண்ட குழுவினர் சேலத்தில் இருந்து வந்துள்ளதாகக் கூறி, கடையில் சோதனையை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் நகைக்கடையில் உள்ள கணக்கு மற்றும் இருப்பு குறித்து சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு 7 மணிக்குப் பிறகும் நீடித்தது.

இந்தச் சோதனையின்போது, கடைகளில் விற்பனையை அதிகாரிகள் நிறுத்தியதுடன், கடைகளில் உள்ளவர்கள் வெளியே செல்லவும், வெளியாள்கள் கடைக்கு வரவும் தடை விதித்தனர்.

வருமான வரித் துறை அதிகாரிகளின் இந்த திடீர் சோதனை நாமக்கல் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.