சென்னையில் மீண்டும் வருமான வரித் துறை சோதனை..! ரியல் எஸ்டேட் நிறுவனம் சுற்றி வளைப்பு
சென்னையில் புரவங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தொடரும் சோதனை
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள், நண்பர்களின் வீடுகள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என பல இடத்திலும் சோதனையானது தொடர்ந்தது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மணல் குவாரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனர்களிலும் சோதனையானது தொடர்ந்தது.
ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஐடி சோதனை
கடந்த வாரம் ஸ்ரீபெரும்புதூரில் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ப்ளெக்ஸ் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தினர். இந்தநிலையில் இன்று காலை சென்னையில் புரவங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னையில் எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள்
தமிழக பாஜக அலுவலக ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.! காரணம் என்ன.?