வரி ஏய்ப்பு புகார்..! தமிழகத்தில் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
வரி ஏய்ப்பு புகார் காரணமாக தமிழகத்தில் முக்கிய தொழில் அதிபரிகளின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 10 இடங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 20 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தனியார் நிறுவனம் மீது புகார்
வருமான வரியை முறையாக செலுத்தாமல் ஏமாற்றுபவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பிரபல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் ஐதராபாத்தை சேர்ந்த கொரியர் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களாக கருதப்படும் தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
30 இடங்களில் சோதனை
சென்னை நுங்கம்பாக்கம் ப்ரொபஷனல் கொரியர் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், பிற கிளை அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கொரியர் அனுப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சோதனை நடைபெற்று வரும் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் முறையான கணக்குகள் மற்றும் வரி ஏய்ப்பு சந்தேகங்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுமா..? அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை.?