பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் வருடத்திற்கு ரூ.25 ஆயிரம் கோடி வருமானம் வரும் என்றும், எனவே, பட்டாசு ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டார். 

விருதுநகர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் வருடத்திற்கு ரூ.25 ஆயிரம் கோடி வருமானம் வரும் என்றும், எனவே, பட்டாசு ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அதில், "கடந்த சில வருடங்களாகவே பட்டாசுத் தொழில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. 'பட்டாசுகளால் காற்று மாசு ஏற்படுகிறது' என்ற புதிய பிரச்சனையால் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

'பட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிப்ப்படையாது' என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே, மத்திய அரசு பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

இந்தியத் தயாரிப்புப் பட்டாசுகளை வெளிநாட்டினர் பலர் வாங்குவதற்கு ஆர்வம் காட்டிவருகின்றனர். எனவே, மத்திய அரசு பட்டாசு ஏற்றுமதிக்கு உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகளில் பொட்டாசியம் குளோரைடு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், இந்தியப் பட்டாசுகளில் அலுமினியப் பொடி மட்டுமே மூலப்பொருள். எனவே, இந்தியப் பட்டாசு ஆபத்தில்லாதது என்று வெளிநாட்டினர் விரும்பி நம்பிக்கையோடு வாங்கிச் செல்கின்றனர். 

இப்படி வெளிநாட்டவர் வாங்கிச் செல்லும் பட்டாசுகளால் மட்டும் வருடத்திற்கு ரூ.25 ஆயிரம் கோடி வருமானம் வரும். அதற்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நெசவு, பட்டாசு, தீப்பெட்டி, விசைத் தறி போன்ற தொழில்களை பாதுகாக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேலூரில் தோல் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. 

சிறு தொழில்கள் வளர்ச்சியடைந்தால்தான் ஒரு மாநிலம் பொருளாதார வளர்ச்சியடைய முடியும். எனவே, மத்திய - மாநில அரசுகள் சிறு தொழில்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.