விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் ஒரு முக்கிய தொழில் நகரமாகும், இது இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90% பங்களிக்கிறது. இங்கு பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி உற்பத்தி, மற்றும் அச்சிடுதல் ஆகிய மூன்று முக்கிய தொழில்கள் செழித்து வளர்கின்றன. சிவகாசியில் 1960களில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, தற்போது 2500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை நேரடி மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபடுகின்றன. இங்கு அவ்வப்போது வெடி விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்த வண்ணம் உள்ளன.
கோகுலேஸ் பட்டாசு ஆலை வெடி விபத்து
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள சின்னகாமன்பட்டியில் கோகுலேஸ் என்ற தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வழக்கம் போல இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அடுத்தடுத்த குடோன்களுக்கு பரவியது. இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
5 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
இந்த வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடி விபத்து போர்மேன் கைது
ஆலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறுவதால் உள்ளே மேலும் சில தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோகுலேஸ் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து தொடர்பாக போர்மேன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
