சௌதியில் இறந்த கணவர்; உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டி ஆட்சியரிடம் மனைவி கோரிக்கை..
இராமநாதபுரம்
சௌதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராமநாதபுரம் ஆட்சியருக்கு, இறந்தவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ளது கொம்பூதி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அரசு மகன் கோவிந்தன் (42).
இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சௌதி அரோபியாவில் உள்ள அல்ஜெத்தா நகரில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்தார் கோவிந்தன். மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்த கோவிந்தனுக்கு மனைவி வழிவிட்டாள், மகன்கள் தமிழரசன், முத்துமுருகன், மலைச்செல்வம் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், "தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக முதல்வர் பழனிசாமி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஆதரவின்றி வறுமையில் உள்ள தங்களது குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை சௌதி அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்" என்றுகோவிந்தனின் மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.