husband and wife suicide in chennai porur

சென்னையை அடுத்த போரூரில் இறுதிச்சடங்கு செலவுக்கு பணம் வைத்துவிட்டு தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரூரை அடுத்த ஐயப்பன் தாங்கல் பகுதியைச் சேர்ந்த மனோகரன்(62) - ஜீவா(56) தம்பதி. இருவருமே மத்திய அரசு ஊழியர்களாக பணிபுரிந்தவர்கள். மனோகரன் ஓய்வு பெற்றுவிட்டார். ஜீவாவும் விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். 

இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்துவருகிறார். இவர்களுடன் வசித்துவந்த மகன், புத்தாண்டை ஒட்டி பழனிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனோகரன் - ஜீவா தம்பதி, நேற்றிரவு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறப்பதற்கு முன் அந்த தம்பதி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் எங்களின் இறுதிச் சடங்கிற்காக காசோலை வைத்துள்ளோம். நாங்கள் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை எங்கள் மரணத்திற்கு பின்னர் எங்களை எரித்துவிடுங்கள். எங்களது இறுதிச் சடங்கிற்கான செலவுக்காக தலா ரூ.2 லட்சம் காசோலை வைத்துள்ளோம். அதை பயன்படுத்திக்கொள்ளவும் என்று எழுதியுள்ளனர்.

இதையடுத்து தம்பதியின் இறப்பு செய்தி அவர்களது மகன் மற்றும் மகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இறுதி சடங்கு செலவுக்கு பணம் வைத்துவிட்டு முதிய தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.