வீடு உள்ளவர்களுக்கே பசுமை வீடு கொடுத்தால் எப்படி? தகுதியான பயனாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை...
திருவண்ணாமலை
வீடு உள்ளவர்களுக்கே பசுமை வீடு கொடுக்கப்படுவதால் விரக்தி அடைந்த விவசாயிகள் தகுதியான பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக அதிகாரியிடம் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமைத் தாங்கினார்.
இந்தக் கூட்டம் தொடங்கியபோது, குறைதீர் கூட்டத்தை சில அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கும், கூட்டத்தின்போது அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காததற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு விவசாயிகள் மெளனமாக இருந்தனர்.
பின்னர், தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்து அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து நடைபெற்றக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
"செங்கம் பகுதியில் உள்ள கிராமங்களில் வீடு உள்ளவர்களுக்கும் பசுமை வீடு வழங்கப்படுகிறது. இதனால், தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தகுதியான பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகங்களை திறக்க வேண்டும்.
நீர்நிலை கால்வாய்களை தூர்வார வேண்டும்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினர்.
அதனைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியர்கள் உதயகுமார், ரேணுகா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.