- Home
- Tamil Nadu News
- பள்ளி மாணவர்களே எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.. யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும்? முடிவுகள் வெளியானது!
பள்ளி மாணவர்களே எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.. யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும்? முடிவுகள் வெளியானது!
தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை மத்திய, மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குத் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS-National Means-cum-Merit Scholarship Scheme) மத்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி மாதத்தில் தேர்வு நடத்தப்படுகிறது.
ஜனவரி 10ம் தேதி தேர்வு
இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அதாவது 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000 வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி 10ம் தேதி நடைபெற்ற நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம்
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: 2025-26ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்ட தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் கடந்த ஜனவரி 10ம் தேதி நடைபெற்றது.
தேர்வு முடிவுகள் எப்படி பார்ப்பது?
தற்போது தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக www.dge.tn.gov.in இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர் விவரங்களாகிய பெயரில் உள்ள எழுத்துக்கள், பிறந்த தேதி, மாற்றுத்திறனாளி வகை மற்றும் இனம் ஆகியவற்றில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் தேர்வு கூட நுழைவுச்சீட்டினை இணைத்து dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 24ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

