பெரம்பலூர்,
பெரம்பலூரில் தடையை மீறி இந்து இயக்கத்தினர் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 115 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
நடராஜன் (42). இவர் பெரம்பலூரை அடுத்த கல்பாடி எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர். தனது நண்பர்களுடன் சேர்ந்து பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். கடையின் ஒரு பகுதியில் மர பட்டறையும் இருக்கிறது.
இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய தினம் நள்ளிரவு நடராஜன் கடையில் திடீரென்று தீபிடித்துக் கொண்டது.
இதில் இலட்சம் ரூபாய் மதிப்பிலான மரப்பலகைகள், பர்னிச்சர்கள் உள்ளிட்டவை சேதமாயின.
யாரோ கடைக்குத் தீவைத்து விட்டனர் என்று இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் கூறி, தீ வைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் நிர்வாகத்திடம் “பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், காவல் நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த இந்து இயக்கத்தினர் வாயில் கருப்பு துணிகட்டிக் கொண்டு செவ்வாய்க்கிழமை மதியம் பெரம்பலூர் வெங்கடாசலபதி நகரில் உள்ள மாவட்ட பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்தனர்
பின்னர் உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு சிலை அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியும், சாலைமறியலில் ஈடுபட்டும் தடைமீறினர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி காவலாளர்கள் கைது செய்தனர்.
பாரதீய ஜனதா கட்சி கோட்ட பொறுப்பாளர் இராமகிருஷ்ணா சிவசுப்ரமணியன், மாவட்ட தலைவர் சாமி.இளங்கோவன், இந்து முன்னணி மாநில இணை அமைப்பு செயலாளர் பொன்னையன், பஜ்ரங்தளம் மாநில பொறுப்பாளர் கார்த்திக் சரவணன் மற்றும் பாரதீய ஜனதா, விசுவஇந்து பரிஷத், இந்து முன்னணி, பஜ்ரங்தளம், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து இயக்கங்களின் நிர்வாகிகள், தொண்டர்கள் 115 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
நடராஜனின் பர்னிச்சர் கடையில் மின்கசிவால் தீப்பிடித்து எரிந்தது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
