Heavy rain Water flooding with waste water So far 305 mm recording ...
கரூர்
கரூரில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இதுவரை 305 மி.மீ பதிவானது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 4-ஆம் தேதி கத்தரி வெயில் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்கிறது. இதனால் கோடை வெப்பத்திற்கு மக்கள் ஆளாகாமல் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதன்படி. கரூரில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பத்தின் உஷ்ணத்தை உணர முடிந்தது. இருப்பினும் மாலை 4.40 மணியளவில் திடீரென கருமேகங்கள் உருவாகி சிறிது நேரத்திலேயே மழை பெய்யத் தொடங்கிற்று.
கரூர் நகர்ப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் உழவர் சந்தை ரௌண்டானா, திருமாநிலையூர் ரௌண்டானா, லைட்ஹவுஸ் கார்னர், சுங்ககேட் ஆதிபேக்கரி, திருக்காம்புலியூர் ரௌண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் செல்ல வழியின்றி அப்பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கலந்து சாலைகளில் வெள்ளம்போல ஓடியது. இதனால் துர்நாற்றம் வீசி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கரூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பெய்த மழை அளவு:
கரூர் - 5.2 மில்லி மீட்டர், அரவக்குறிச்சி - 3.2 மில்லி மீட்டர், அணைப்பாளையம் - 16.1 மில்லி மீட்டர், க.பரமத்தி - 33.4 மில்லி மீட்டர், குளித்தலை - 4 மில்லி மீட்டர், தோகைமலை - 32 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரம் - 1 மில்லி மீட்டர், மாயனூர் - 1 மில்லி மீட்டர், பஞ்சப்பட்டி - 41 மில்லி மீட்டர், கடவூர் - 42.4 மில்லி மீட்டர், பாலவிடுதி - 82 மில்லி மீட்டர், மைலம்பட்டி - 44 மில்லி மீட்டர் என மொத்தம் 305.30 மி.மீ. மழை பெய்துள்ளது.
