கரையைத் தொட்ட கஜா புயல்…. நாகை, திருவாரூரில் கொட்டித் தீர்க்கும் கனமழை… மின்சாரம் நிறுத்தம்….
கஜா புயல் தற்போது நாகையின் வடகிழக்கே 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததையடுத்து பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயலால் திருவாரூர், காரைக்கால் மற்றும் நாகையில் மழை பெய்து வருகிறது.
திருவாரூரை அடுத்த ஆண்டிபந்தல், சன்னாநல்லூர், நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோன்று காரைக்காலில் கோட்டிச்சேரிமேடு, கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், நாகையில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
கனமழை மற்றும் சூறைக் காற்றால் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நாகையில் குடிசை, ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் மினசார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூரில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது,பல மீனவ கிராமங்களில் மின்வாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதே போல் புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது. . காரைக்கால், கோட்டிச்சேரிமேடு, கிளஞ்சல்மேடு, பகுதிகளிலும் மழை பெய்தது.