Heat to burn in nellai Now 100 degrees People looking for natural drinks ...

திருநெல்வேலி

திருநெல்வேலியில் கோடை தொடங்குமுன்னே சுட்டெரிக்கும் வெயில் 100 டிகிரியை தொட்டுவிட்டதால் வெளியே நடமாடும் மக்கள் இயற்கை பானங்களையும், பழங்களையும் தேடி ஓடுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தாண்டு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஒகி புயல் நேரத்தில் பெய்த பலத்த மழையால், அணைகளில் மட்டும் தண்ணீர் பெருகியது. இதனால் ஆற்றுப்பாசன பகுதியில் மட்டும் முழுமையாக நெல் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தை விட முன்கூட்டியே கோடை காலம் தொடங்கிவிட்டது. அண்மையில் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டதால் மழை பெய்து குளிர்ந்த காற்று வீசியது. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் வெயில் தனது வேலையை காட்டியது. இதனால், மழை பெய்த சுவடே தெரியாமல் போய்விட்டது.

கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவானது. நண்பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தது. சாலையில் அனல் காற்று வீசியது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் திணறினர். 

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பவும், தாகத்தை தணிக்கவும் மக்கள் குளிர்ச்சி தரும் பழங்கள், குளிர்பானங்கள் என தேடி ஓடுகின்றனர். இதனால், தர்பூசணி விலை உயர்ந்துள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்துக்கு, திண்டிவனம் பகுதியில் இருந்து தர்பூசணி பழங்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட தர்பூசணி தற்போது ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல வெள்ளரி, நுங்கு, பதநீர், கம்பங்கூழ், கேப்பை கூழ், இளநீர் கடைகளும் இருப்பதால் மக்கள் தங்களை இளைப்பாற்றி கொண்டு இதம் காண்கின்றனர்.