தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11,333 இடங்களில் புதன்கிழமை தோறும் கொரோனா தடுப்பூசி உட்பட 13 வகை தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில்‌ இதுவரை கொரோனா தடுப்பூசி முதல்‌ தவணை 96.50 சதவீதத்தினருக்கும்‌, இரண்டாம்‌ தவணை 91.10 சதவீதத்தினருக்கும்‌ செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பூஸ்டர்‌ தவணை தடுப்பூசி 4.25 கோடி பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில்‌, இதுவரை 80,705 பேருக்கு மட்டுமே செலுத்தியுள்ளதாகவும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்‌ பூஸ்டர்‌ தடுப்பூசியை அவசியம்‌ செலுத்திக்‌ கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.

மேலும் படிக்க:குன்னூர் அருகே குடியிருப்புக்குள் நுழைந்து பால் பாக்கெட்டுகளை குடித்த கரடி.. வெளியான பரபரப்பு CCTV காட்சிகள்!

மேலும் பேசிய அவர், அக்டோபர்‌ மாதம்‌ முதல்‌ ஒவ்வொரு புதன்கிழமைகளிலும்‌ அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ உள்பட 11,333 இடங்களில்‌ கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட 13 வகையான தடுப்பூசிகள்‌ செலுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து இந்த தடுப்பூசி முகாம்களில் கர்ப்பிணிகள்‌, பிறந்த குழந்தை முதல்‌ 16 வயது வரையுள்ளவர்களுக்கு போடப்படும் அனைத்து தடுப்பூசியும்‌ செலுத்தப்படும் என்று விளக்கமளித்தார். அதே போல் வியாழக்கிழமை தோறும் பள்ளிகளில்‌ தகுதியான மாணவர்களுக்கு தேவையான தடுப்பூசி செலுத்தப்படும்‌ என்றார்.

மேலும் படிக்க:அதிர்ச்சி !! பள்ளிக்கூடத்திற்கு போக சொன்னதால் விபரீதம்.. தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவன்..

தற்போது தமிழகத்தில் பரவி வரும் பன்றி காய்ச்சல் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், பருவக்காலங்களில் வரக்கூடிய ஹெச்‌1 என்‌1 இன்ப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு இதுவரை குழந்தைகள்‌ முதல்‌ பெரியவர்கள்‌ வரை 1,044 பேர்‌ பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த வகை காய்ச்சல்‌ 3 அல்லது 4 நாள்களில்‌ குணமாகிவிடும்‌. எனவே பள்ளி மாணவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தால்‌ குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம்‌ என்று அறிவுறுத்திய அவர், பள்ளிகளுக்கு விடுமுறை
வேண்டிய சூழல் தற்போது இல்லை என்று கூறினார்.