"காசு இல்லாதவன்கூட கேட்டுதான் வாங்கி சாப்பிடுவான்" - ராயல்டி குறித்து அப்பவே சொன்னவர் இளையராஜா...
காசு இல்லாதவன் கூட கேட்டுதான் வாங்கி சாப்பிடுவான் ஆனால் ஒருவருக்கு சொந்தமான பொருளை அவர் அனுமதியின்றி எடுத்து பணம் சம்பாதிப்பது ஏற்றுகொள்ள முடியாது என ராயல்டி குறித்து இசைஞானி இளையராஜா ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திரையுலகில் தனது 50 கால நிறைவையொட்டி கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கச்சேரிக்காக இவரது அணி தற்போது அமெரிக்காவில் இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் பல்வேறு இசையமைப்பாளர்கள் பாடிய பாடல்களை அவர் பாடி வந்துள்ளார். இந்நிலையில், முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் தான் கம்போஸ் செய்த பாடல்களை என் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராயல்டி குறித்து இசைஞானி இளையராஜா ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :
காசு இல்லாதவன் கூட, சார் சாப்பிடனும் காசு இல்லை என கேட்டுதான் வாங்கி சாப்பிடுவான்.
எக்கோ நிறுவனம் மூன்றாம்பிறை படத்தில் இருந்து என்னால் ஆரம்பிக்கப்பட்டது.
தயாரிப்பாளர்களுக்கு ராயல்டி போய் சேரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆரம்பித்தேன்.
பின்னர், எனக்கும் பங்கு இருப்பதால் தயாரிப்பாளரும் நானும் சம பங்காக பிரித்து கொள்வோம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதை நிறுவனங்கள் முறையாக பின்தொடரவில்லை. அதனால் வழக்கு தொடர ஆரம்பித்தேன்.
என் அனுமதியின் காரணமாகதான் எக்கோ நிறுவனம், அகி நிறுவனம், சங்கீதா நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வந்தது. ஆனால் யாரும் எனக்கு ராயல்டி கொடுக்கவில்லை.
ஒரு பாடலுக்கான காப்புரிமை 5 வருடங்களுக்கு மட்டுமே செல்லும். அதற்கு மேல் செல்லாது. அதற்கு மேல் வேண்டும் என்றால் திரும்ப காப்புரிமையை புதுபிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.