தமிழ் மொழியின் செறிவுக்கு ஓரளவுக்கு நிகரான மொழி சமஸ்கிருதம் மட்டும் தான்..! ஆளுநர் ரவி
திருக்குறளை ஆங்கிலத்தில் படித்தபோது, அதன் விளக்கங்கள் மிக ஆழமானதாக இல்லாததால், சரியாக மொழிப்பெயர்ப்பு செய்யப்படவில்லையோ என நினைத்தேன். ஆனால், திருக்குறள் எளிதில் புரியக் கூடிய ஒன்றாக இருப்பதை நான் அறிந்ததாக ஆளுநர் ரவி தெரிவித்தார்.

தமிழ் மொழியின் சிறப்பு
தமிழ்நாடு ஆளுநரின் எண்ணித் துணிக தொடரின் 10வது நிகழ்ச்சியான தமிழ் ஆளுமைகளுடனான கலந்துரையாடல் சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் நடைபெற்றது.அப்போது தமிழ் மொழி இலக்கியங்களை மொழிப்பெயர்ப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளூநர் ரவி, நான் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பு, எனக்கு தமிழ் இலக்கியம் பற்றியும், மொழி பற்றியும் பெரியளவில் ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். தமிழ் மொழி இலக்கியஙகளை மொழிப்பெயர்ப்பதால் பெருமை இல்லை. தமிழ் இலக்கியங்களின் சிறப்பை, தமிழ் மொழியின் செறிவை தமிழ் மொழியிலேயே படித்தால் தான் ரசிக்கவும், ருசிக்கவும் முடியும்.
திருக்குறள் உற்ற தோழன்
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என சொல்வது போல எதுவுமே சிரமமில்லை என்பதை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள தமிழ் பயிலும் மக்கள் நிரூபித்துள்ளனர். தமிழ் மொழி இலக்கியச் செறிவு மிகுந்தது என்றும், திருக்குறள் பற்றியும் தெரிந்திருந்தாலும், மற்றபடி ஒன்றும் தெரியாது என கூறினார். திருக்குறளை ஆங்கிலத்தில் நான் படிக்கத் தொடங்கியபின், அதனுடன் மிக ஆழ்ந்த அன்பு வயப்பட்டேன். நான் 5வது படிக்கும்போது என் அப்பா பகவத் கீதையை கொடுத்து படிக்கச் சொன்னார்.
அப்போதிலிருந்து பகவத் கீதை தான் எனக்கு உற்ற தோழனாக இருந்தது. ஆனால், இப்போது திருக்குறளோடு சேர்த்து இரண்டு புத்தகஙகள் என உற்ற தோழனாக உள்ளன. திருக்குறளை ஆங்கிலத்தில் படித்தபோது, அதன் விளக்கங்கள் மிக ஆழமானதாக இல்லாததால், சரியாக மொழிப்பெயர்ப்பு செய்யப்படவில்லையோ என நினைத்தேன்.
தமிழ் மொழிக்கு நிகரான மொழி.?
ஆனால், திருக்குறள் எளிதில் புரியக் கூடிய ஒன்றாக இருப்பதை நான் அறிந்தேன். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் நான் சமஸ்கிருதத்தை பார்த்தேன். அப்போது அக உணர்வு, மெய்யுணர்வு ஆகியவற்றை பற்றி திருக்குறள் பேசியிருப்பதை உணர்ந்தேன். இந்திய மொழிகளில் கூட சமஸ்கிருதம் மட்டும் தான் தமிழுக்கு நெருக்கமாக வரக்கூடிய தன்மை பெற்றுள்ளது.
இந்திய மொழிகளில் வேறு எந்த மொழியும் தமிழுக்கு நிகரான மொழி இல்லை. திருக்குறளை திருவள்ளுவர் பெருங்கடலை வாளியில் அடக்குவது போல் செய்துள்ளார். அது அவரால் மட்டுமே சாத்தியம். நாம் அதனை விரிவாக தான் விளக்க வேண்டும் என்பதை மொழிபெயர்ப்பாளர்கள் புரிந்து மொழி பெயர்க்க வேண்டும் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.