பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அதிகாரிகளிடம் கிரிஜா வைத்தியநாதன் பேச்சு!
தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய உள்துறை அதிகாரிகளிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பேசியுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய உள்துறை அதிகாரிகளிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பேசியுள்ளார். தமிழகத்தில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு குறித்து கிரிஜா வைத்தியநாதன் விளக்கமளித்ததாகவும் கூறப்படுகிறது.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது மருத்துவமனை சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிகபட்ச மருத்துவ சிகிச்சை உதவி அளித்த பிறகும், அவரது உடலுறுப்புகளின் செயல்பாடுகள் மோசமாக உள்ளன. அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகவும் சீரற்ற நிலையிலும் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் மத்திய உள்துறை அதிகாரிகளிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.