நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, இன்று காலை ரயில் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாகப்பட்டினம் சென்றார். காலை 8.30 மணியளவில் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்ற அவர், மாவட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். 

பின்னர், புயலால் வீடுகளை இழந்தவர்கள், கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிகளையும், தென்னைகளை இழந்தவர்களுக்கு தென்னங்கன்றுகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, பாய், போர்வை உள்பட 27 விதமான நிவாரண பொருட்களையும் வழங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மொத்தம் 441 பேரது குடும்பத்தினருக்கு ரூ.96.60 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர், கஜா புயல் பாதிப்பு மற்றும் அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் தொடர்பான புகைப்படங்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சரோஜா, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக அலுவலகம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு, மக்களுக்கு விநியோகிக்க இருந்த நிவாரண பொருட்களை பார்வையிட்டார்.