முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவைத் தொடர்ந்து அதிமுக மாஜி எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைந்ததை அடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் நிகழ்வு தொடங்கியுள்ளது. அந்த வகையில் எம்ஜிஆரின் விசுவாசியான முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த நிலையில், தற்போது அதிமுக மாஜி எம்.பி. மைத்ரேயன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கம்

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தில் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் டாக்டர் வா.மைத்ரேயன், Ex. M.P.. கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.