அரை நிர்வாணமாக சுற்றித் திரிந்த அமெரிக்க பெண்மணி ஒருவரை போலீசார் மீட்டு, காப்பகத்தில்  ஒப்படைத்த சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.

அரை நிர்வாணமாக சுற்றித் திரிந்த அமெரிக்க பெண்மணி ஒருவரை போலீசார் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்த சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளைகேட் பகுதியில் பெண் ஒருவர் அரை நிர்வாணமாக சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அப்பகுதிக்கு சென்ற போலீசார், அந்த பெண்மணியை மீட்டு, புதிய உடைகளை வாங்கி அணிவித்தனர். பின்னர், பனையூரில் உள்ள காப்பகம் ஒன்றில் போலீசார் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த வந்தனர். மீட்கப்பட்ட பெண்மணியின் பெயர் மரீன் நெல்சன் என்பதும், இவரும், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமல் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது தெரியவந்தது. திருமணத்துக்குப் பிறகு, சென்னை, வேளச்சேரி பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மரீன் நெல்சன், போதை பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மென்பொருள் நிறுவனத்தில் இருந்து விமல் வேலை இழந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, போதையில் இருந்த மரீன் நெல்சனை, விமல் காரில் அழைத்துக் கொண்டு, காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி விட்டு சென்றுள்ளது தெரியவந்தது. மரீன் நெல்சன் கொடுத்த தகவலின்பேரில் வேளச்சேரியில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று விசாரித்ததில், விமல் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காலி செய்து தற்போது தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதன் பின்னர், மரீன் நெல்சன் குறித்து, அமெரிக்க தூதரகத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அமெரிக்க தூதரகத்தினர், காவல் துறையினர் உதவியுடன், காப்பகத்தில் இருந்த பெண்ணை மீட்டு விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பி வைத்தனர்.