வெடிமருந்து தொழிற்சாலையை மூடகோரி இரண்டு பேருந்துகளில் திரண்டு வந்து மனு கொடுத்த ஐந்து கிராம மக்கள்...
திருச்சி
வெடிமருந்து தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ஐந்து கிராம மக்கள் இரண்டு பேருந்துகளில் திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் கே.ராஜாமணி தலைமைத் தாங்கினார். மக்களிடம் இருந்து மனுக்களை அதிகாரிகள் வாங்கினர்.
அப்போது துறையூர் தாலுகா தளுகை ஊராட்சிக்கு உட்பட்ட டி.முருங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி, டி.பாதர்பேட்டை, வெள்ளாளப்பட்டி, நாகையநல்லூர் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரண்டு பேருந்துகளில் திரளாக ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
அவர்களுக்கு முன்னாள் ஊராட்சித் தலைவர் பெரியசாமி தலைமைத் தாங்கினார். அவர்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில், “டி.முருங்கப்பட்டியில் இயங்கிவந்த வெடி மருந்து தொழிற்சாலையில் கடந்த 1-12-2016 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 19 தொழிலாளர்கள் பலியாயினர்.
மேலும், வெடி விபத்தினால் எங்கள் கிராமத்தில் பல வீடுகளில் கண்ணாடி, சாளரங்கள் உடைந்துள்ளன.
மாவட்ட நிர்வாகத்தினால் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டிருந்த தடையில்லாச் சான்று விபத்துக்கு பின்னர் ரத்து செய்யப்பட்டுவிட்டது. தொழிற்சாலை நடத்துவதற்கான உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
ஆனால், மூல பொருட்களை எடுக்கிறோம் என்ற பெயரில் அந்த தொழிற்சாலைக்குள் ஆட்கள் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்.
மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியாமல் சட்ட விரோதமாக இந்த தொழிற்சாலை இயங்கி வருவதுபோல் தெரிகிறது.
எனவே, அதனை நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் ராஜாமணி, “அந்தத் தொழிற்சாலை மீண்டும் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காது” என்று உறுதியளித்தார்.