அவன் தொல்லை தாங்க முடியல... ஒரே மகன நானே கொன்னுட்டேன்... கலங்கும் தந்தை!
போதை பழக்கத்துக்கு அடிமையான, என் ஒரே மகனை நானே கொன்னுட்டேன்... மனமுடைந்து கதறும் சௌபாவை, ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, எஸ்.எஸ்.காலனியில் வசித்து வரும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சௌபா என்கிற சௌந்திரபாண்டியன், தனது மகன் விபினைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். கொலையில் உதவியதாக மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சௌபாவின் மனைவி லதா பூரணம் கோவில்பட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒரே மகனான விபின், முதுகலைப் படிப்பு முடித்த அவர், வேலை செய்யாமல் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்பது, நண்பர்களுடன் சுற்றுவது என்று இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் சில நாட்களாக லதாவை விபின் சந்திக்க வரவில்லை. அதனால் விபின் எங்கே என்று சௌபாவிடம் விசாரித்திருக்கிறார். அதற்கு சௌபா தெரியாது என்று கூறியுள்ளார். மகனைக் காணவில்லை. என் கணவர் மீது சந்தேகமாக உள்ளது என்று கடந்த 5 ஆம் தேதி, மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் லதா புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரிக்க தொடங்கிய போலீஸ் நேற்று காலை சௌபாவை விசாரித்தனர். அப்போது, மகனைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய சௌபா பின்னர் போதை அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததாக கூறியுள்ளார்.
இதனால், சௌபா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. சௌபாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஒரே மகன் அவன். போதைப் பழக்கத்தால் சீரழிஞ்சுட்டான். அவன் தொல்லை தாங்க முடியல. அதனால என் ஒரே மகன நானே கொன்னுட்டேன். சுத்தியால் அடித்ததும் அவன் மயங்கி விழுந்து இறந்துட்டான். அப்புறம் திண்டுக்கல்ல இருக்கும் என் தோட்டத்து வீட்டுல அவன் உடலை புதைச்சுட்டேன் என்று கூறியுள்ளார். அவருக்கு உதவியாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றனர். இதற்கிடையே சௌபாவை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.