ஓமலூர் காவல் உதவி ஆய்வாளரை, வழக்கறிஞர் எனக்கூறி ஏமாற்றிய பெண், அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், கூட்டாளிகளுடன் சேர்ந்து போட்டோ, வீடியோ எடுத்து மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்துள்ளார். புகாரின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பூபதி என்பவர் பணியாற்றி வந்தார். இவர், கடந்த மே மாதம் கொலை வழக்கு தொடர்புடைய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக காடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டியைச் சேர்ந்த அலமேலு (25), காவல் உதவி ஆய்வாளர் பூபதியிடம் தான் வழக்கறிஞர் என அறிமுகம் செய்து பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அடிக்கடி சந்தித்து கொண்டதில் அவர்களுக்குள் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பொய் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை வெளியே எடுக்க பணம் வேண்டும் எனக்கூறி காவல் உதவி ஆய்வாளர் பூபதியிடம் ரூ.92 ஆயிரம் பறித்துள்ளார். பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் பூபதியை தொடர்பு கொண்டு ஊமகவுண்டம்பட்டி பகுதிக்கு வந்து பணத்தை பெற்றுச் கொள்ளுமாறு அலமேலு தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி இரவு 11 மணியளவில் அங்கு சென்ற பூபதி அலமேலுவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அதைக்காட்டி பூபதியை மிரட்டி மூன்றரை பவுன் செயினை பறித்தது மட்டுமல்லாமல் ஜிபே மூலம் ரூ.27,000 பெற்றுக்கொண்டு தப்பித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் உதவி ஆய்வாளர் பூபதி தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அலமேலுவை பிடித்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது 12ம் மட்டுமே படித்து விட்டு வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டும் வழக்கறிஞர் உடையில் காவல் நிலையத்திற்கு வந்து கட்டப்பஞ்சாயத்து பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. போலீசை மிரட்டிய வழக்கில் விசிக ஒன்றிய துணை செயலாளர் வீரவளவன்(எ) முருகேசன்(36), செல்வம் (28), திருமால் அழகன்(21), பிரவீன்குமார்(23) ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். எஸ்.ஐ. மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.