Everyday Yoga is our duty - collective talk to students on yoga day

தினமும் உடற்பயிற்சி, யோகா செய்வது நமது கடமையாகும் என்று சர்வதேச யோகா நாள் விழாவில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பேசினார்.

திருவண்ணாமலையில் உள்ள விளையாட்டு அரங்கில், காலை 7 மணிக்கு நடந்த யோகாவில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் காவலாளர்கள் பங்கேற்று யோகா செய்தனர்.

அதனைத் தொடர்ந்து யோகா பயிற்சியில் பங்கேற்ற கல்லூரி, பள்ளிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாய்சேவா யோகா முதன்மை மருத்துவர் எழில்மாறன் வரவேற்றார்.

மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே யோகாவில் பங்கேற்ற கல்லூரி, பள்ளிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கிப் பேசினார்.

அவர் பேசியது: “அனைவரும் உடற்பயிற்சி, யோகா தினமும் செய்ய வேண்டும். யோகா தினத்தன்று மட்டும் யோகா செய்யக்கூடாது. தினமும் உடற்பயிற்சி, யோகா செய்வது நமது கடமையாகும்.

யோகா செய்தால் நல்ல பழக்க வழக்கங்கள் நம்மிடம் உண்டாகும். மாணவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் படிக்கும் பாடங்கள் எளிதில் மனதில் புரியும். மனநெருக்கடி, ஞாபகமறதி குறையும்.

பள்ளி மாணவர்கள் நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். பள்ளிக்கு ஒழுக்கமான உடைகளை அணிந்து வர வேண்டும். மாணவர்களுக்கு பள்ளியில் யோகா சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் வீட்டின் அருகே வசிப்பவர்களுக்கும் யோகா சொல்லி கொடுக்க வேண்டும். மாவட்ட விளையாட்டு அரங்கு யோகா செய்வதற்கான சிறந்த இடமாக காணப்படுகிறது.

யோகா செய்ய விரும்புபவர்களும், யோகா கற்றுக் கொடுக்க விரும்புபவர்களும் மாவட்ட விளையாட்டு அரங்கை பயன்படுத்தி கொள்ளலாம்” என்று அவர் பேசினார்.