காரிமங்கலம்,
காரியமங்கலம் பகுதியில் 12 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தடையை மீறி எருதாட்டம் நடத்தி பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
காரிமங்கலம் அடுத்த இராமாபுரத்தில் பொங்கல் பண்டிகையை ஆண்டுதோறும் “எருது விடும்” விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தடை இருப்பதால், மக்கள் தடையை மீறி எருது விடும் விழா நடத்தினர்.
அந்த ஊரில் உள்ள விநாயகர் கோவில் திடலுக்கு மொட்டலூர், இராமாபுரம், பையம்பட்டியானூர், எச்சனஅள்ளி, சின்ன மிட்டஅள்ளி, கெரகோடஅள்ளி, மேல்கொள்ளுப்பட்டி, கீழ்கொள்ளுப்பட்டி, காட்டூர், ஈச்சங்காட்டூர் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாடுகளை கோவில் வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர், தடையை மீறி மாடுகளில் கயிறு கட்டி எருதாட்டம் நடைபெற்றது.
இதில் மாடுகள் சீறிப் பாய்ந்து பொதுமக்கள் கூட்டத்தை நோக்கிச் சென்றன. இதில் 12 கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று கயிறை பிடித்தப்படி மாடுகளை விரட்டி கொண்டு கோவிலைச் சுற்றி வந்தனர்.
இந்த எருதாட்டத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு இரசித்து பொங்கல் விழாவை தமிழர் பாரம்பரியத்தோடு கொண்டாடினர். இராமபுரத்தில் தடையை மீறி எருதாட்டம் நடைபெற்றாலும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
