பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி.! தொழிற்சாலைகள், குடோன்களை தொடர்ந்து கண்காணிக்கனும்- எடப்பாடி பழனிசாமி
சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துக்கள் தினசரி செய்தியாகி வருகின்றது , ஆகவே பட்டாசு தொழிற்சாலைகள், குடோன்கள் , அரசு நிர்ணயித்த விதிகளை உரிய முறையில் அந்த பட்டாசு தொழிற்சாலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பட்டாசு ஆலையில் விபத்து- 4 பேர் பலி
சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இதில், சதிஷ் உட்பட 9 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அங்கு பணி செய்த 9பேரில் 4பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், மேலும் 4 பேர் கவலைக் கிடமான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்கள் எனத் தகவல் அறிந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
குடோன்களை தொடர்ந்து கண்காணிக்கனும்
தமிழ்நாட்டில் சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துக்கள் தினசரி செய்தியாகி வருகின்றது , ஆகவே இந்த விடியா அரசு பட்டாசு தொழிற்சாலைகள், குடோன்கள் ,அரசு நிர்ணயித்த விதிகளை உரிய முறையில் அந்த பட்டாசு தொழிற்சாலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதுடன், உடல் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு உயரிய சிகிச்சையும் அவர்களுக்கும் உரிய நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்கிட வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்