அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் தற்கொலை வழக்கு - விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்
அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணி தற்கொலை வழக்கில் விசாரணை அதிகாரி திடீரென மாற்றப்பட்டுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் நாமக்கல்லை சேர்ந்த சுப்பிரமணி காண்ட்ராக்டர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு சபரீசன் என்ற மகன் உள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஏரளாமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
மேலும் அமைச்சருக்கு நெருக்கமான நண்பர்கள் வீடு அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அமைச்சரின் நண்பரான சுப்பிரமணி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் ஏரளாமான ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சுப்ரமணியை அழைத்து விசாரணை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பல பெரும் புள்ளிகளுடன் தொடர்பு கொண்ட சுப்ரமணிக்கு தங்கள் பெயர்கள் வெளி வரக்கூடாது என அவர்கள் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்து போன சுப்பிரமணி வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம், செவிட்டு ரங்கன் பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரித்து வந்த விசாரணை அதிகாரி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்க நாமக்கல் மதுவிலக்கு பிரிவு ஏடிஎஸ்பி செந்திலை நியமித்து மாவட்ட எஸ்.பி. உத்தவிட்டுள்ளார்.