சென்னையில் மத்திய அமைச்சர் கலந்துகொண்ட விழாவில் அனுமதியின்றி யானையை பயன்படுத்திய விவகாரத்தில் யானை பாகனௌக்கும் , உரிமையாளருக்கும் அபராதம் விதித்த மாஜிஸ்ட்ரேட் வரைமுறையின்றி காட்சிகளை பதிவு செய்த கேமராமேன்களை எச்சரித்து அனுப்பினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை தேனாம்பேட்டையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கலந்து கொண்ட விழாவில் அனுமதியின்றி யானையை பயன் படுத்தியதாக விலங்குகள் நல அமைப்பு யானையை பறிமுதல் செய்தது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த விழாவுக்காக வரவேற்பு என்ற பெயரில் யானை ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர். கோவில் விழா என்று கூறி சிறிது தூரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால் அமைச்சர் விழாவுக்காக வரவழைக்கப்பட்டு காமராஜர் அரங்கில் படிகட்டுகள் மீது ஏற்றி நிறுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல அமைப்புக்கு புகார் அனுப்பபட்டது. புகாரின் பேரில் காமராஜர் அரங்கம் வந்த விலங்குகள் நல அமைப்பு யானையை பறிமுதல் செய்து வேப்பேரியில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு சென்றது.

பின்னர் இன்று யானையின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டு நடமாடும் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டு இன்று யானையுடன் உரிமையாளர் அண்ணாமலை மற்றும் பாகன் சேகர் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விலங்கியல் மருத்துவர் சந்திரசேகரனும் நேரில் ஆஜராகி யானைக்கு உணவு சரிவர வழங்கவில்லை, அனுமதி பெறாமல் இது போன்று விழாவில் பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதைகேட்டு எச்சரிக்கை செய்த மாஜிஸ்ட்ரேட் பாகன், உரிமையாளர் இருவருக்கும் தலா ரூ 7200 அபராதம் விதித்தார். அடுத்த முறை இவ்வாறு சிக்கினால் யானையை வண்டலூருக்கு அனுப்பி விடுவேன் என்று எச்சரித்தார். 

இந்த நிகழ்ச்சியை படம் பிடித்த தொலைக்காட்சி கேமரா மேன்கள் அத்துமீறி மொபைல் கோர்ட் உள்ளே சென்று படமெடுத்தனர். இதனால் கோபமடைந்த மாஜிஸ்ட்ரேட் அனைவரையும் கூண்டில் நிற்கவைத்து எச்சரித்து அனுப்பினார்,