Electricity consumption in Tamil Nadu: தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு ஒரே நாளில் 430.13 மில்லியன் யூனிட் என்ற புதிய உச்சத்தை இன்று எட்டி இருக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் ஒருநாள் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. செவ்வாய்க்கிழமை 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சார நுகர்வு இருந்திருக்கிறது எனவும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு நேற்று மின்சார நுகர்வு இருந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

மேலும், "தமிழ்நாடு முதல்அமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலில், தொலைநோக்குப் பார்வை, சிறந்த திட்டமிடல், மின் உற்பத்தியை பெருக்குவதற்கு முக்கியத்துவம் என திராவிட மாடல் அரசின் சீரிய முயற்சியின் காரணமாக, மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

"தொழில் துறையினர், வணிகர்கள், விவசாயப் பெருமக்கள், இல்லத்தரசிகள் எவரும் இன்னலுக்கு ஆளாகாத வகையில் மின் விநியோகம் சீராக நடந்து வருகிறது. இன்னும் கூடுதல் மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டாலும் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன" என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான அறிவிப்பில், "தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 430.13 மில்லியன் அலகுகளாக, நேற்று 02.04.2024 பதிவு. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தொடர்ந்து மின் விநியோகத்தை சீராக வழங்கி வருகிறது. முந்தைய உச்சபட்ச நுகர்வு 426.44 மில்லியன் யூனிட், 29.03.2024" எனக் கூறப்பட்டுள்ளது.