electric wire shock farmer dead in thiruvarur

திருவாரூர் மாவட்டம் மணலகரம் கிராமத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து கலியபெருமாள் என்ற விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த மாதம் 27-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின.

கடந்த புதன்கிழமை சென்னை கொடுங்கையூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து யுவஸ்ரீ, பாவனா என்ற 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுமிகளின் இறப்பை அடுத்து மின்வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் சற்று தீவிரமாக செயல்பட ஆரம்பித்தனர்.

மின் இணைப்பு பெட்டிகள் திறந்திருந்தால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார்.

சிறுமிகளின் இறப்பை அடுத்து இதுபோன்ற இறப்புகள் நிகழாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணலகரம் என்ற கிராமத்தை சேர்ந்த 60 வயதான கலியபெருமாள் என்ற விவசாயி, தனது சம்பா நிலத்தில் தேங்கியிருந்த தண்ணீரை வடிப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு அறுந்துகிடந்த மின்கம்பியை கவனிக்காமல், அதில் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். 

சிறுமிகளின் உயிரிழப்பைத் தொடர்ந்து இனி இதுபோன்ற இறப்புகள் நடக்காத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக கூறிய அமைச்சர்கள் விவசாயியின் இறப்பிற்கு பொறுப்பேற்பார்களா? மின்சாரத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டதாக கூறிய அமைச்சர் தங்கமணி, இந்த இறப்பிற்கு பொறுப்பேற்பாரா?