தமிழகத்தில் பரவைக்காயச்ச்சல் நோய் பரவாமல் தடுக்க கேரளாவிலிருந்து கோழிகள் மற்றும் முட்டைகள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த பறவை காய்ச்சலை தடுக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி தமிழக – கேரளா எல்லையில் முகாம் அமைக்கப்பட்டு கேரளாவிலிருந்து வரும் வாகனங்களில் பறவைக் காய்ச்சல் தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக கால்நடைத்துறை கூடுதல் இயக்குனர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழ்நாட்டில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பாகங்களிலும் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக - கேரள எல்லையில் 16 இடங்களில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து இருந்து கோழிகள், முட்டைகள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் அவற்றை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என முகாமில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
