நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற தேர்வில், 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு 100க்கும் மேற்பட்டோருக்கு முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. 

Tamil Nadu municipal job scam : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அந்த வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றுள்ளது. 

2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில் முறைகேடாக பணி நியமனம் செய்வதற்கு ஒரு போஸ்டிங்கிற்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை முக்கிய தகவலை தமிழக காவல்துறைக்கு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பணி நியமன உத்தரவுக்கு 35 லட்சம் ரூபாய் வசூல்

இது தொடர்பாக அம்முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில், பணி நியமன உத்தரவுக்காக 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 150 பேர் பணம் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கை எடுத்திடுக

நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அத்தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது.

எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றிருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.