டிஎஸ்பிக்கள் பட்டியலில் குளறுபடி? - தமிழகத்தில் 117 பணியிடங்கள் காலி
தமிழகம் முழுவதும் 117 டிஎஸ்பி பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதவி உயர்வு பட்டியலில் பெரும் குளறுபடி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
தமிழக காவல்துறையில் 117 டிஎஸ்பி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கூடுதல் எஸ்பிக்கள் பலர், டிஎஸ்பிக்கள் பணியையும் கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
தற்போது டிஎஸ்பி பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு சீனியாரிட்டி அடிப்படையில் பட்டியல் தயாரித்துள்ளது. அதில் 136 இன்ஸ்பெக்டர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பட்டியல் தயாரிப்பில் பல்வேறு குளறுபடி நடந்துள்ளதாகவும், அதில் இடம்பெற்றுள்ள இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு புகார்களுக்கு ஆளாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வீரப்பனை கொன்ற அதிரடிப்படையில் பணியாற்றிய 42 எஸ்ஐக்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். அதேபோல இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய 81 பேர் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றனர்.
இதில் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் தற்போதைய டிஎஸ்பிக்கள் பட்டியலில் உள்ளனர். ஆனால் இவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்கள் ஒரு படி தான், பதவி உயர்வு பெற வேண்டும் என சீனியாரிட்டியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் டிஎஸ்பிக்களான 81 பேர் நீதிமன்றத்தை நாடி, கூடுதல் எஸ்.பிக்களாக பதவி உயர்வு பெற்றனர். இந்த தீர்ப்பு எங்களுக்கும் பொருந்தும் என இன்ஸ்பெக்டர்களும் நீதிமன்றத்தை நாடினர்.
நீதிமன்றமும், இவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதுடன் தனிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த 42 பேரில் 22 பேர் டிஎஸ்பிக்களுக்கான பட்டியலில் உள்ளனர்.இதனை எதிர்த்து சீனியாரிட்டி பட்டியலில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதன் காரணமாக கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது